Friday 2 January 2015

புத்தாண்டில் ஒரு சராசரி ஊழியனின் பார்வை !

     
அன்புத் தோழர்களுக்கு ! வணக்கம் ! நம்முடைய இலாக்கா முதல்வர் அவர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியுடன் 2014 இல் நம்முடைய கடின உழைப்புக்கான பாராட்டினையும் தெரிவித் துள்ளார்கள் ! அவர்களுக்கு நம் அனைவரின் சார்பில் நம்முடைய நன்றி உரித்தாகட்டும் !

நடப்பு ஆண்டில் நம் இலாக்காவின் வளர்ச்சி, அதற்கான இலக்கு நிர்ணயம் அதன் தேவைகள் குறித்தும் , மாறி வரும் சந்தைத் தேவைகளுக்கு ஏற்பவும் , புதிய வணிக வாய்ப்புகளுக்கு ஏற்பவும் நம்முடைய திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவேண்டியிருப்பது குறித்தும் தெரிவித்துள்ளார்கள்.

இலாக்காவின் ஊழியர்கள் என்ற வகையில், நம்முடைய இலாக்காவின் வளர்ச்சியில் நம் எல்லோருக்கும் நிச்சயம் அதற்கான கடமை உள்ளது. மிக அதிக அளவில் நம் பங்கும் அதில் உள்ளது. நம் இலாக்காவே நம் அனைவரின் வாழ்வாதாரம் . நிச்சயம் அந்த திசை நோக்கி நாம் செயல்படுவோம் என்று உறுதி கூறுகிறோம்.

ஆனால் அதற்கான அடிப்படை தேவைகள் குறித்தும் நிர்வாகம் தன் பார்வையை செலுத்த வேண்டியுள்ளது என்பதை இந்த நேரத்தில் நாம் பதிவு செய்கிறோம். நம்முடைய ஊதிய உயர்வு , பஞ்சப்படி இணைப்பு போன்ற கோரிக்கைகளை இலாக்காவிடம் நாம் வலியுறுத்தவில்லை. அதற்கான அரங்கு என்பது வேறு. மத்திய அரசின் பார்வையில் அதிகாரிகள் உள்ளிட்ட, அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் சார்பாக அதனை நாம் கொண்டு செல்கிறோம்.

ஆனால் நம்முடைய இலாக்காவில் , நிர்வாக கட்டமைப்பிற்கு ஒரு திசைப் பார்வை மட்டுமே உள்ளது என்பதே நம் ஊழியர்களிடம் உள்ள மனத் தாங்கல். அதனை இந்தப் புத்தாண்டில் தெரிவிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

உதாரணமாக

இலாக்காவின் தகவல் தொழில் நுட்ப மேம்பாட்டுக்கு ரூ. 4909/- கோடியை
ஒதுக்கியது மத்திய அரசு. அதில் ஒரு பைசா கூட நம்முடைய தகவல்
தொழில் நுட்ப அடிப்படை கட்டுமானத்திற்கு அளிக்கப்படவில்லை என்பது வேதனை அல்லவா ?

2000 - 2004 களில் அளிக்கப் பட்ட காலாவதியான கணினிகள் , PRINTER கள் , UPS - BATTERY கள் , BAR CODE SCANNER கூட இல்லாத அலுவலகங்கள் -இதனை வைத்துக் கொண்டு "நொண்டிக் குதிரையில் ஏறி டெல்லிப் பட்டினம்போ" என்று விரட்டுவது வேடிக்கையான விஷயமில்லையா? உடனே பரிசீலிக்க வேண்டிய ஒரு அத்தியாவசியமான அவசர அவசியம் இல்லையா ?

TECHNOLOGY TRANSFER என்ற வகையில் மென்பொருள் அளிப்பதற்கே ரூ.4909 கோடி பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது சரிதானா ?

அதுவும் நமது துறைக்கென்று பிரத்தியேகமாக , அதன் சட்ட விதிகள் ,
சேமிப்பு வங்கி தொடர்பான நம்முடைய இலாக்காவின் தனித்துவமான திட்டங்கள் , காப்பீட்டுப் பகுதியில் நம்முடைய இலாக்காவின் தேவைகள் குறித்தெல்லாம் முறையான ஆய்வு செய்து அதற்கான மென்பொருள் வடிவமைத்துப் பெறாமல் , எவருக்கோ செய்த காலணியை நாம் மாட்டிக் கொள்வதற்கு "நம்முடைய பாதங்களை வெட்டுவது போல" இன்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது சரிதானா ?

இதுபோலத்தான் , MAIL OPERATION, FINANCE & ACCOUNTS, RETAIL OPERATION, RURAL ICT, HR போன்ற பகுதிகளிலும் தனித்துவமான மென் பொருள் பெறாமல் வேறு எவருக்கோ செய்தது நமக்கு வழங்கப்படுமா ?

இதனையெல்லாம் சரி செய்திட வேண்டிய கடமை உள்ள, அதற்காக ஒப்பந்தங்கள் போட்டு (2 YEARS FOR IMPLEMENTATION , 5 YEARS FOR MAINTANANCE) பல நூறு கோடிகள் வாங்கிய நிறுவனங்கள் , பிரச்சினைகளை தீர்த்திட களத்தில் இல்லாமல் ஓடிப் பதுங்குவதும், நம் அப்பாவி ஊழியர்கள் பிரச்சினைகளைத் தீர்த்திட ' இரவு பகலாக " களத்தில் வேலை செய்ய வேண்டி உள்ளதும் சரிதானா ?

"இட்லி திங்கச் சொன்னது ஒருத்தனையாம் - ஏப்பம் விடச்சொன்னது இன்னொருத்தனையாம் " என்ற கிராமத்து பழமொழி இதற்காகத்தான் வந்ததோ ?

தினந்தோறும் எத்தனை எத்தனை பிரச்சினைகள் ? "கழுதை முதுகில் வைத்த சுமை போல" எல்லாம் பழகினால் சரியாகிவிடும் என்பதும் சரிதானா ?

எந்த அளவு "அலைக்கற்றை பரிமாணம் " தேவை என்று கூட அறியாமல் LAPTOP இல் போடும் DATA CARD க்கு உண்டான 256 KBPS /512 kbps BANDWIDTH மட்டும் பெற்று அதில் "மின்னல் வேகத்தில் TRANSACTION" என்று வெறும் "அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது" சரிதானா ?

NET WORK CONNECTIVITY இல்லாததால் TRANSACTION செய்திட இயலாமல் பொதுமக்களிடம் அடிவாங்கும் அளவுக்கு ஊழியர் அவதியுறுவது தெரியாதா ? எத்தனை ஊரில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டது ? இது தெரியவே தெரியாதா ?

இப்போது மேம்படுத்தப்பட்டு விட்டது என்று இன்னமும் நாம் 'பொய்' கூறிக் கொண்டுதானே உள்ளோம் ? பல நாட்கள் 'HANG OVER ' இல் ஊழியர்படும் அவதி , மறுநாள் மறந்து விடும் என்று சமாதானம் செய்தால், பொது மக்களும் அப்படியே சமாதானமாகி விடுவார்களா ?

பல நூறு கோடிகள் கொடுத்து ஒப்பந்தம் போடும் முன்னரே உரிய தொழில் நுட்ப மற்றும் துறை சார் அறிவு கொண்ட அதற்கான வல்லுநர் குழு அமைத்து அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்து ஒப்பந்தங்கள் போட வேண்டாமா ? ஏனோ தானோ வென்று ஒப்பந்தங்கள் போடப்பட்டு , அதன் பாதிப்புகள் அனைத்தையும் அடிமட்ட தொழிலாளி தலையில் கட்டி " ஓடு ஓடு" என்றால் எப்படி ஓடுவது என்று சிந்திக்க வேண்டாமா ?

இத்தனைக்கும் நம் எழுத்தரின் அடிப்படை கல்வித்தகுதி +2 தானே ? மேலும் அதில் பாதி பேர் , பழைய 8TH STANDARD QUALIFICATION இல் தேர்வு செய்யப்பட்டு தபால்காரராக /MTS ஆக பணியாற்றி பதவி உயர்வு பெற்ற எழுத்தர் தானே ? இவர்கள் ஒரே நேரத்தில் 58 SOFTWARE நம் துறையில் HANDLE செய்யும் அளவு அறிவு பெற்றவர்களா ? 1200 SCREEN SHOT நினைவில் கொள்ளும் வண்ணம் தொழில் நுட்ப அறிவு மேம்பட்ட தகவல் தொழில் நுட்பத் துறையில் உயர் கல்வி பெற்றவர்களா ? இருந்தும் இத்தனை பல்நோக்கு உள்ள அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள் என்பது உலகிலேயே எந்தத் துறையிலும் இல்லாத புதுமை இல்லையா ? இது குறித்து என்றாவது , எவராவது ஒரு வரி பாராட்டியது உண்டா ? பாராட்டு கூட ஒரு "ஊக்க மருந்து" தானே ?

வேறு எந்த மத்திய அரசுத் துறையிலாவது ஒரே நேரத்தில் 58 SOFTWARE கணினிகளில் பயன்பாட்டிற்கு உள்ளதா ? ஏன் ? தொழில் நுட்ப முதுகலைப் பட்டம் அல்லது தொழில் நுட்ப பொறியாளர் பட்டம் பெற்ற உயர் கல்வி பெற்றவர்கள் பணி புரியும் MNC க்களில் கூட இத்தனை SOFT WARE ஒரு ஊழியர் கையாள்கிறாரா ? இல்லையே !

இவ்வளவு ஊழியம் செய்தும், அதுவும் INITIALISATION காலத்தில் 'TRANSITION' காலத்தில், ஊழியர் தம் பணியில் ஒரு சிறு தவறு செய்தால் கூட, அதனை தொழில் நுட்ப ரீதியாக சரி செய்திடும் விபரம் கூட சிறிதும் தெரிந்துகொள்ளாத சில கீழ்மட்ட அதிகாரிகள் , தனக்கு "RULE 16 போடுவது தவிர வேறு எதுவும் தெரியாது" என்ற வகையில் ஊழியர்களை தினம் தினம் பழிவாங்கும் போக்கு மிகவும் அதிகமாகி உள்ளதே ? அது உங்களுக்கு தெரியுமா ? பல இடங்களில் கூக்குரல் கேட்கிறதே ? அது உங்களுக்குப் புரியுமா ?

BUSINESS DEVELOPMENT கூட்டங்களில் வெறும் TARGET பற்றி மட்டும் பேசினால் , அதனை சாதிக்க வேண்டிய அடிமட்ட ஊழியர் சரியான WORKING ENVIRONMENT இல்லாவிட்டால் எவ்வாறு சாதிப்பான் என்பது குறித்து ஆய்வு செய்வது கிடையாதா ?

வணிக வளர்ச்சி, மாத இலக்கு என்ற பெயரில் 'MULTI LEVEL MARKETING COMPANY " கள் போல "உன் பெண்டாட்டி பேரில் 100 RD கணக்கு" , "பிள்ளை பேரில் 100 RD கணக்கு" , அடுத்த PREMIUM மே கட்டாத "'பினாமி " RPLI பாலிசிகள் GDS ஊழியர் சம்பளத்தில் போடு" என்று வணிக யுக்தியே சிறிதும் தெரியாத சில கீழ்மட்ட அதிகாரிகளின் தினசரி நடவடிக்கைகள் நம் துறையை நிஜமான வளர்ச்சி பெற வைக்குமா ? வீழ்ச்சி பெற வைக்குமா ? இது குறித்து சிந்திக்க வேண்டாமா ? வணிக வளர்ச்சி கூட்டங்களில் பேசுவது உண்டா ?

EPOST சேவை எதற்காக துவங்கப்பட்டது என்பதே தெரியாமல், போட்டியில்லாத , எவருமே போட்டியிட முடியாத இந்த சேவைப் பகுதியை எவ்வாறு விரிவாக்கம் செய்வது என்பது கூட தெரிந்துகொள்ளும் அடிப்படை அறிவு (KNOWLEDGE ) இல்லாமல் "சினிமா நடிகை பிறந்த நாளுக்கு 1000 EPOST போடு" "ரசிகர் மன்றம் நீயே அமை" என்றெல்லாம் கோமாளித்தனம் செய்யும் கீழ் மட்ட அதிகாரிகளை உங்களுக்குத் தெரியவே தெரியாதா ? இவையெல்லாம் நம் துறையை வளர்ச்சி பெற வைக்குமா ? இது குறித்து சிந்திக்க வேண்டாமா ?

பல ஆயிரக் கணக்கான காலியிடங்களை நிரப்பவே வேண்டாமா ?

காலியிடங்களை நிரப்ப போராடி நடவடிக்கை எடுத்தாலும், தேர்வு முடிவுகள் வெளி வருவதில் ஆண்டுக் கணக்காக ஆகிறதே ? இது சரி செய்யப் பட வேண்டாமா ?

புதிய வேலைகளுக்கு அளவீடு என்பது வேண்டாமா ?

இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகள் - சாதாரண அடிப்படை ஊழியனின் மனதில் - புத்தாண்டு கேள்விகள் உண்டு ! இவற்றையும் நிச்சயம் பரிசீலிக்க வேண்டிய கடமை நம் நிர்வாகத்திற்கு உண்டு !

இந்த திசை நோக்கியும் பார்த்தால் மட்டுமே நம்மால் இலாக்காவை நினைக்கும் திசையில் , உரிய வேகத்தில் , கொண்டு செல்ல முடியும் ? ஒரு திசைப் பார்வையில் "இலக்கு " "இலக்கு" என்று சாட்டையை சுழற்றினால் அதில் பெறுவது நிச்சயம் வளர்ச்சியாக இருக்காது . வீக்கமாகவே இருக்கும் . செயற்கையான வீக்கம் நோயின் அடையாளம் !

நாம் நோய் பெறப் போகிறோமா ? வளர்ச்சி பெறப் போகிறோமா ? என்பது
நம் கையில் இருக்கவேண்டும் என்று நிர்வாகம் நினைப்பது போல , நிர்வாகமும் அப்படி நினைக்கவேண்டும் என்று இந்தத் துறையின் ஊழியர்களான நாம் நினைப்பதில் தவறு எதுவும் உண்டோ ? சிந்திக்க வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment